சென்னை: தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு இரவு நேரங்களில் வரும் பெண்களிடம் சில வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் பாதுகாப்பை உறுதி செய்வதில் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரிக்கு தினமும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். தரமணி மற்றும் திருவான்மியூரில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பறக்கும் ரயில்களை நம்பி தான் பணிக்கு வருகிறார்கள். குறிப்பாக, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையமோ அல்லது ஐடி நிறுவனங்களுக்கோ செல்ல போக்குவரத்து வசதி இல்லை. அதனால் தரமணி ரயில் நிலையம் வரும் பெண்கள் அங்கிருந்து வாடகை கார், ஆட்டோக்களில்தான் அலுவலகத்திற்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் நடந்தே அலுவலகத்திற்கு செல்கின்றனர். இந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் உள்ளது. வார நாட்களில் ரயில்கள் மக்கள் கூட்டம் மற்றும் ஆள்நடமாட்டம் அதிகம் இருப்பதால் பயமின்றி அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். ஆனால் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரமணி ரயில் நிலையத்தில் ஆள்நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. மேலும், தரமணி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் பாதுகாப்பு இல்லாமல் பாதாள சுரங்கப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் உள் பகுதியிலும் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இருட்டாக உள்ளது.