உளுந்தூர்பேட்டை, நவ. 14: உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியின் வழியாக தினந்தோறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை சென்று வருகிறது. இதில் டோல்கேட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பிரிவு சாலை பகுதியில் தினந்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். அதிக விபத்து பகுதியாக உள்ள டோல்கேட் அருகில் அடிக்கடி நடைபெறும் வாகன விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அதிகளவு போடப்பட்டு உள்ளது. இந்த பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்ற நோக்கில் போடப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தி வாகன தணிக்கை என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வாகன தணிக்கை அதிகாரிகள் தினந்தோறும் டோல்கேட் பகுதியில் ஓட்டல்கள் அருகில் வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்து வாகன ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.