பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்

விழுப்புரம், நவ. 14: ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

சிஐடியு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து விழுப்புரம் நகர போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: