நாகர்கோவில், நவ.14: நாகர்கோவிலில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்திய மின்ஊழியர் சங்கத்தினர் 280 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு 380 தினக்கூலி வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது. இதன்படி பேரணிக்காக வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை மின்ஊழியர்கள் திரண்டனர். சங்க இணைச் செயலாளர் இர்வின்தாஸ் தலைமையில் பேரணியாக செல்ல முயன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், செயலாளர் செல்வதாஸ், ராஜகோபால், தங்கமோகன் உள்பட பலர் 280 பேர் கைது செய்யப்பட்டனர்.