வடமாநில இளைஞர் மர்ம சாவு

காலாப்பட்டு, நவ. 13: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் போத்ரா மகன் சிவம் (20). இவர் குடும்பத்துடன் புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடன் வசித்து வந்த அவரது தாயும், தந்தையும் கடந்த மாதம் ஒடிசாவுக்கு திரும்பி சென்றனர். தொடர்ந்து, அந்த வீட்டில் சிவம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இருப்பினும், கடந்த 3 நாட்களாக சிவம் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், சிவம் தங்கி இருந்து வீட்டின் மேல்பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, சிவம் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமேனி, சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து சிவத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சின்னமுதலியார்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: