திருக்கார்த்திகை திருவிழா பழநி கோயிலில் நவ.17 காப்புகட்டுதலுடன் துவக்கம்

பழநி, நவ. 12: பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவம்பர் 17ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது.  பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை  திருவிழா. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் 17ம் தேதி  மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. மாலை 5.30 மணிக்கு சாயரட்டிசை பூஜைக்குப்பின் மூலவருக்கு காப்பு கட்டப்படும். தொடர்ந்து சண்முகருக்கு காப்பு கட்டப்படும். பின்னர் துவாரபாலகர்கள், நவவீரர்கள், மயில், ஸ்தீப கம்பம் ஆகியவற்றிக்கு காப்பு கட்டப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு போன்றவை நடைபெறும்.

    அதன்பின் 6 நாட்களும் இப்பூஜைகள் நடைபெறும்.  22ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி 23ம் தேதி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 5.15 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து யாகசாலை தீபாராதணையும், மலைக்கோயிலில் 4 மூலைகளில் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.  விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Related Stories: