திருவாரூர், நவ.8: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வெடி வெடித்ததாக திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வெடி வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றமானது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த உத்தரவை மீறியதாக மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரில் 2 வழக்குகள், தாலுகாவில் ஒன்று மற்றும் கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, பரவாக்கோட்டை, கோட்டூர், முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான், எடையூர் மற்றும் திருக்களார் என மாவட்டம் முழுவதும் 19 போலீஸ் ஸ்டேஷன்களில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு உத்தரவை மீறுதல்) மற்றும் 288 (பொது இடத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதில் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் அதிகபட்சமாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.