டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ.8: டெங்கு தடுப்புபணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் வலியுறுத்தி உள்ளார்.மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பிற்காக நகராட்சி சார்பில்  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 30வது வார்டு பூக்கொல்லை மற்றும் பல்வேறு பகுதியில் நடைபெறும் பணிகளை  நகராட்சி ஆணையர் விஸ்வநாதன்  ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும்  டயர் கடைகள், பஞ்சர் மற்றும் பழுது பார்க்கும் கடைகளில் உள்ள பழைய  டயர்களை உடனே அப்புறப்படுத்தி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நகராட்சி  ஆணையர் விஸ்வநாதன்  கூறுகையில், ஆய்வின் போது டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டலோ, பொது மக்கள், வணிகர்கள் தங்கள் இருப் பிடத்தினை கொசுப்புழு உற்பத்தி செய்ய ஏதுவாக வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ உடனே அதற்கான அபராத தொகை விதிக்கப்படும். 2வது முறை கண்டறியப்பட்டால் 10  மடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும்.நகராட்சிப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தி கலன்கள் கண்டறியப்பட்டு இதுவரை சுமார் ரூ.50 ஆயிரம்  அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசு உற்பத்தி கலன்கள் மற்றும் அமைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது கடமை என்பதை நினைவு கூர்வதுடன், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கொசு உற்பத்தி இல்லாத வீடுகளே உதவி புரிகிறது என்பதனையும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், நகர அமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: