திருவிடைமருதூர், நவ.8: பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட கூடுதல் ஈரப்பத சலுகையை தற்போதும் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின் மோட்டாரை நம்பி குறுவை சாகுபடி மிக குறைந்த அளவிற்கே விவசாயிகள் நடப்பாண்டில் சாகுபடி மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது அறுவடை தீவிரம் அடைந்து குருவைக்கான அறுவடை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவிற்கு திறக்கப்படாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். தற்போது ஆங்காங்கே ஒரு சில கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். மேலும் டீகே9 உள்ளிட்ட சில சில நெல் ரகங்களை கொள்முதல் செய்ய மறுப்பதால் தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோன்று விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அதிக ஈரப்பதம் இருப்பதாக காரணம் காட்டிகொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தமாக விவசாயிகள் கூறுகையில், வறட்சியையும் அதிக மழையையும் தாங்கி நல்ல விளைச்சலைத் தரக்கூடியடி கே9 உள்ளிட்ட பழமையான நெல் ரகங்களை பயிரிட்டு இருந்தோம். தற்போது அறுவடை முடிந்து அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் இந்த ரகத்தை வாங்க மறுக்கின்றனர்.தே போன்று பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் அம்பாசமுத்திரம் 16, ஆடுதுறை 37 உள்ளிட்ட பொது ரகங்களை எடுக்க மறுக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் அறுவடை செய்த நெல்லில் எவ்வளவு ஈரப்பதம் இருப்பினும் எளிதாக கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது வெயிலில் நன்கு உலர்த்திய நெல்லையும் ஈரப்பதம் என்ற சாக்கு போக்கு காரணத்தை காட்டி வேண்டுமென்றே எடுக்க மறுக்கின்றனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு 22 சதவீத ஈரப்பதம் கொண்ட குருவை நெல்லையும் கொள்முதல் செய்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், எனவே பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதம் 22% வரை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.