ஆண்டிபட்டி, நவ.8:தீபாவளி விடுமுறையை தொடர்ந்து ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து அணைப் பகுதியை சுற்றி மகிழ்ந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று முன்தினம் செவ்வாய்கிழமையன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் நேற்று முன்தினம் வைகை அணையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றி பார்த்து கொண்டாடினர். சிறுவர்களும், குழந்தைகளும் ஊஞ்சல் ஆடியும், யானை சிலையின் தும்பிக்கையில் சறுக்கியும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். மேலும் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீடுகளில் இருந்து விருப்பமான உணவுகளை சமைத்து கொண்டு வந்து, பூங்காவின் நிழற்பகுதிகளில் ஆங்காங்கே குழுவாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.