ஈரோடு, நவ. 8: ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் கிராமப்புற நகர்புற இளைஞர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி பிரிவினருக்கு அதிகப்பட்சமாக ரூ.25 லட்சமும், சேவை பிரிவினருக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் நகர்புற பொது பிரிவினருக்கு 15 சதவீதமும், மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். கிராமப்புறத்தை சேர்ந்த பொது பிரிவினருக்கு 25 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு, 35 சதவீதமும் வழங்கப்படும். உற்பத்தி பிரிவில் பயனாளி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் தொழிற்சாலை கட்டிடம், இயந்திர தளவாடங்கள், நடைமுறை மூலதனங்களின் முதலீடு அடங்கும். இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் www.kviconline.gov.in என்ற இணைய தளத்தில், pmegpe என்ற போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.