ப.வேலூர் அருகே பட்டாசு வெடிப்பதில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்

பரமத்திவேலூர், நவ.8: ப.வேலூர் அருகே பட்டாசு வெடிப்பதில்இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கண்டிபாளையம் ஓங்காளியம்மன், பகவதி அம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக இரு சமூகத்தினர் இடையே மோதல் நிலவி வருகிறது. நேற்று அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எதிர் தரப்பினருக்கும், பன்னீர்செல்வம் தரப்பினருக்குமிடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியது.

இதில் எதிர் தரப்பை சேர்ந்த சந்திரசேகர், தமிழ்ச்செல்வன் காயமடைந்தனர். இவர்கள் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பன்னீர்செல்வமும் இந்த மோதலில் காயமடைந்தார். இவர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த சரவணன் (29) நந்தகுமார் (22), எதிர் தரப்பில் தங்கவேல் (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரு தரப்பு மோதலால் கண்டிபாளையம் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: