பென்னாகரம், நவ.8: பென்னாகரம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என பெண்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களாக, மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படாமல் உள்ளதால் கர்ப்பிணிகள் தவித்து வருகின்றனர். கடந்த மாதம் 24ம் தேதி, சீலநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சங்கீதா, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வந்த போது, மருத்துவமனை நிர்வாகம் ஒன்றரை மணி நேரம் அலைகழிக்க வைத்து, அறுவை சிகிச்சை அரங்கம் வெடித்துவிட்டது என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.