பைக் விபத்தில் இருவர் பலி

சாத்தான்குளம், நவ. 8:   சாத்தான்குளம் வடுகச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் தண்டபாணி (30). கோவையில் காய்கறி வியாபாரம் செய்து  வந்த இவர்  தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார்.    பின்னர் சாத்தான்குளம் அடுத்த தோப்புவளத்தில் உள்ள சகோதரியை பார்க்க பைக்கில் சென்றுகொண்டிருந்தார். தோப்புவளம் வளைவில் திரும்புகையில், இவரது கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பைக், சாலையோர சுவரில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் விசாரித்து வருகிறார்.    எட்டயபுரம்:  எட்டயபுரம் அருகேயுள்ள கீழ ஈரால் ஆர்சி தெருவைச் சேர்ந்த மரியமிக்கேல் மகன் சூசை ஜான் (21) இவரும், இவரது நண்பரான அதே தெருவைச் சேர்ந்த ராசையா மகன் பொன்கருப்பசாமியும் (23) கீழஈராலில் இருந்து கோவில்பட்டிக்கு புதிய டிவி வாங்க சென்றுகொண்டிருந்தனர். எட்டயபுரம் அடுத்த இளம்புவனம் அருகேயுள்ள பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் பைக் மோதியது.

   இதில் சூசைஜான் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பொன் கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் சூசைஜான் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: