தூத்துக்குடி, நவ. 8: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி வரும் 13ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று (8ம் தேதி) கோலாகலமாகத் துவங்குகிறது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுதலும், தீபாராதனையும் நடக்கிறது.