கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு

கரூர், நவ. 2: கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் வாகனங்கள் நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜாரில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லும் பிரம்மதீர்த்தம் சாலை உள்ளது. இந்த சாலையில் சீனிவாசபுரம், மக்கள் பாதை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலையும் உள்ளது. மேலும் கரூர் எம்எல்ஏ அலுவலகம், அரசு உயர்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் திடல், சபா போன்ற முக்கிய மையங்களும் இந்த சாலையில் உள்ளன. இதன் காரணமாக எந்த நேரமும் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் சாலைகளில் இந்த சாலையும் ஒன்றாக உள்ளது. இந்த சாலையின் அருகிலேயே ஜவஹர் பஜார் உள்ளது. இந்த பஜாரில்தான் நகைக்கடை, ஜவுளிக்கடை போன்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.

இப்பகுதிக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் வாகனங்களில் வந்து பொருட்களை வாங்கிச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே ஜவஹர் பஜார் மக்கள் வெள்ளத்தினால் நிரம்பி வருகிறது. இந்நிலையில் ஜவஹர் பஜாரில் உள்ள பெரும்பாலான கடைகளில் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காரணத்தினால் கார் போன்ற வாகனங்களில் வரும் அனைவரும் பிரம்மதீர்த்தம் சாலையோரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பிற வாகனங்கள் இந்த சாலையில் சீராக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: