திருச்செங்கோடு, நவ.2: திருச்செங்கோடு நகராட்சி 11 மற்றும் 12வது வார்டுக்குட்பட்ட பகுதிகளை கொண்டு கூட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு திருச்செங்கோடு - ஈரோடு பிரதான சாலை உள்ளது. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அய்யகவுண்டம்பாளையம், குடித்தெரு, எஸ்பிகே நகர், வேளாளர் காலனி, பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டப்பள்ளி பஸ் ஸ்டாப்பிற்கு வந்து, அங்கிருந்து திருச்செங்கோடு அல்லது ஈரோட்டிற்கு பஸ் பிடித்து செல்கின்றனர். இது 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ள சாலையாகும். இங்கு பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்கூடம், சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்த பின், மீண்டும் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக பயணிகள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பயணிகள் நலம் கருதி, கூட்டப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் மீண்டும் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.