நாமக்கல், நவ.2: நாமக்கல்லில் முதியவர் ஒருவர் மர்ம காய்ச்சலால் நேற்று உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்ததால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நாமக்கல் கணேசபுரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(77). இவர் அதே பகுதியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். டாக்டர்கள் பரிசோதித்த தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் ராமதாஸ் பன்றிக்காய்ச்சலால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமதாஸ் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் இருந்து, ராமதாஸூக்கு பன்றிக்காய்ச்சல் என எந்த அறிக்கையும் வரவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.