வேலூர், நவ.2: வேலூர் மத்திய சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10வது கட்டமாக இன்று 5 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதிகளாக உள்ளவர்களில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அதற்கான அறிக்கையை தமிழக அரசுக்கு சிறை நிர்வாகம் அனுப்பி வைத்தது.அதன் அடிப்படையில் இதுவரை 9 கட்டங்களாக 100க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10வது கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேரை நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.இதையறிந்த அவரது உறவினர்கள் அவர்களை அழைத்து செல்வதற்காக நேற்று அதிகாலையிலேயே சிறை வாசல் முன்பு காத்திருந்தனர். அப்போது காலை 6 மணிக்கு சிறையில் இருந்து 5 பேரை சிறைத்துறை நிர்வாகம் விடுதலை செய்தது. அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வழியனுப்பி வைத்தனர். அவர்களை பார்த்த உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.