ஏற்காடு, நவ.1: ஏற்காட்டில் கிராம உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்ககத்தினர் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஏற்காடு தாலுகா அலுவலக வாயிலில் கிராம உதவியாளர்கள், சங்க வட்டார தலைவர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ₹15,700 வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியம் மற்றும் போனஸ் ₹3,500 வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க செயலாளர் ராமர், பொருளாளர் முரளி, மோகன், மாதையன், செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சார்லஸ் நன்றி கூறினார்.