நாமக்கல், நவ.1: பள்ளிபாளையத்தில் இன்று வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறகிறது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் இன்று (1ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் அழகுக்கலை, தையல் பயிற்சி, பெட் சைட் அசிஸ்டெண்ட், ஆட்டோ மேட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன் போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேருபவர்களுக்கு போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள் புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.