ஆண்டிபட்டி, நவ.1: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற 900 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் 170 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 280 க்கும் மேற்பட்ட செவிலியர்களுடன் பணியாற்றி வருகின்றனர். இங்கு பொதுநல பிரிவு , தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, ஸ்கேன் சென்டர், எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டர், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மருத்துவமனைக்கு நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டமின்றி கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.