லாரி மீது சொகுசு பஸ் மோதி 2 டிரைவர்கள் பலி 2 பயணிகள் படுகாயம் நாட்றம்பள்ளியில் அதிகாலை பயங்கரம்

நாட்றம்பள்ளி, நவ.1:நாட்றம்பள்ளி அருகே நேற்று அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் 20 பயணிகளுடன் ஒரு தனியார் சொகுசு பஸ் பெங்களூருவிற்கு புறப்பட்டது. இதில் ஒரு டிரைவரும், மாற்று டிரைவர் ஒருவரும் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேசிய ெநடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மீது சொகுசு பஸ் எதிர்பாராமல் மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதில் பஸ் டிரைவர்கள் 2 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பயணிகளை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இடிபாடுகளில் இருந்து டிரைவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், விபத்தில் பலியான டிரைவர்கள், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டூர் பகுதியை சேர்ந்த அஜித்(22), தேனி மாவட்டம் கருமத்தூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பது ெதரியவந்தது. அதிவேகமாகவும், தூக்க கலக்கத்தில் ஓட்டி சென்றதாலும் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: