பெரம்பலூர்,அக்.30: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தோருக்கு அரசு சார்பில் வழங்கப்பட உள்ள விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த தனிநபர், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு சார்பில் 15 விருதுகள், தலா 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இந்த வகையில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளை பெறவிரும்பும் தகுதியான நபர்கள் www.scd.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். மேலும் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகள் நலஆணையர், சென்னை-5 என்றமுகவரிக்கு வருகிற 31ம்தேதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.