வேலூர், அக்.31:ரேஷன் கார்டு கேட்டு மனைவியுடன் வந்த கள்ளக்காதலனை தாக்கிய தொழிலாளியை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(48), தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்(45). இந்நிலையில் மாரியம்மாள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முருகனை விட்டு பிரிந்துள்ளார். இதையடுத்து மாரியம்மாளுக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த அம்பிகாபதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இதையடுத்து மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் அம்பிகாபதியுடன் சென்றுவிட்டாராம்.இந்நிலையில் மாரியம்மாளின் மூத்த மகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். இதனிடையே மூத்த மகளின் பெயர் உள்ள ரேஷன் கார்டை ஆதாரமாக கொடுத்தால் பிரசவ கால உதவித்தொகை ₹18 ஆயிரம் கிடைக்கும் என்று மருத்துவமனையில் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மாரியம்மாள், அம்பிகாபதியுடன் சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள முருகன் வீட்டிற்கு வந்து ரேஷன் கார்டை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், மாரியம்மாள் மற்றும் அம்பிகாபதியை சரமாரியாக தாக்கினாராம்.இதுகுறித்து அம்பிகாபதி வேலூர் வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.