கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் உறுதி திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருப்பது உறுதி செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் 2016ம் ஆண்டு ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் (பொறுப்பு) கே.விசயராகவன், பயிற்சி கலெக்டர் எம்.பிரதாப், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்(பொறுப்பு) க.பவானி, ஓய்வு பெற்ற அகரமுதலி திட்ட இயக்குனர் கோ.செழியன், தொழிலாளர் உதவி ஆணையர் (செயலாக்கம்) க.செந்தில்குமரன், மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனா;.

கருத்தரங்கில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:

தாய் மொழி, முதல் மொழி நம் தமிழ் மொழி. என் நண்பர் ஒருவர் மலைவாழ் மக்களின் மொழி, கலாசாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவர் ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள மலைவாழ் மக்களிடம் ஆய்வு செய்ததில், அவர்களின் தோற்றம், மொழி, உச்சரிப்பு சில வகைகள் தமிழோடு ஒத்து போவதாக தெரிவித்தார். இது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும். ஒரு நாட்டின் சிறப்பு அதன் தாய் மொழியிலும், கலாசாரத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பதில் உலக சாதனை புரிந்தார்கள். தமிழ் எழுத்துக்களை பார்த்து வாசித்தால் வார்த்தை தானாக வரும். அதுதான் தமிழின் பெருமை. ஆனால் ஆங்கிலம் உள்பட பிற மொழிகளில் எழுத்துக்களை வைத்து வார்த்தைகள் வராது. மேலை நாடுகளில் முதல் கல்வி தாய்மொழியில் தான் கற்றுத் தருகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சுத்தமான, அழகான தமிழ் பேசுகிறார்கள். தென்ஆப்பிரிக்கா நாட்டில் 4ம் தலைமுறையாக வசிக்கும் 1½ லட்சம் தமிழர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்களிலும் பெயர் பலகைகள் தமிழில் இருப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: