பெண் போலீஸ் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் தற்கொலை செய்து கொள்ள முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் லதா(25). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து தச்சம்பட்டு காவல்நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஒருவாரமாக அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், லதா நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கோயில் பிரகாரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, லதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு சுயநினைவு திரும்பியது.

பெண் போலீஸ் லதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: