திருவண்ணாமலை, அக்.25: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் நேற்று திடீரென விஷம் குடித்தார். அவர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக விஷம் குடித்தாரா? என விசாரணை நடந்து வருகிறது.திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் லதா(25). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மாவட்ட ஆயுதப்படையில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காவலராக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.இந்நிலையில், லதா கடந்த ஒருவாரமாக அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை 10 மணியளவில் கோயில் பிரகாரத்தில் லதா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, லதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.