சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவருக்கு வெட்டு

சென்னை: சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட முன்பகையால் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (34). ஆட்டோ டிரைவரான இவருக்கும் சக ஆட்டோ டிரைவரான கோபிநாத்துக்கும் இடையே சவாரி ஏற்றுவதில் பிரச்சனை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு கோபிநாத் தனது நண்பர் பார்த்தசாரதியுடன் சேர்ந்து குடிபோதையில் மதியழகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதியழகனை சரமாரியாக வெட்டிவிட்டு தனது நண்பருடன் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் கோபிநாத், பார்த்தசாரதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: