சிறுவனின் போதை மயக்கம் விபரீதமானது தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்

திருவொற்றியூர்: போதையில் சிறுவன் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 2 பெண்கள் உள்பட 4 பேர்காயம் அடைந்தனர். சென்னை மாதவரம் அருகே கொளத்தூர் குமரன் நகரை சேர்ந்தவர் வெள்ளை வினோத் (38). இவர், சமையல் கான்ட்ராக்டர். நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பிறந்தநாள் விழாவுக்காக சமையல் ஆர்டர் எடுத்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் வெள்ளை வினோத், தனது உதவியாளர் மனோ (17) என்பவரிடம் கீழே நிறுத்திவைத்துள்ள தனது காரை பூட்டிவிட்டு வரும்படி சாவியை கொடுத்து அனுப்பியுள்ளார். சாவியை எடுத்து சென்று மனோ இயக்கியபோது தாறுமாறாக ஓடிய கார், அவ்வழியாக  ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள் மீதும், நடந்து சென்ற இருவரின் மீதும் மோதியதுடன் சாலையின் நடுவில் உள்ள ராட்சத கழிவுநீர் கால்வாயில் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதுபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில், மனோ போதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிறுவன் மனோவை கைது செய்தனர். உறவினரின் தவறான வழிகாட்டுதலால் போதையில் காரை ஓட்டி சிறுவன் விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால், சாலையில் சென்ற அப்பாவி மக்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: