ராதாபுரம் அருகே துணிகரம் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

ராதாபுரம், அக். 17:  ராதாபுரம் அருகே ஆசிரியர் வீட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் நடுவூரை சேர்ந்தவர் முருகேசன் (40), கூந்தன்குளம் அருகே காடன்குளம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி பானுமதி (35), விஜயநாராயணத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  நேற்று காலை வழக்கம்போல் இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர். வயலுக்கு சென்றிருந்த முருகேசனின் பெற்றோர், மாலையில் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக முருகேசனுக்கு பெற்றோர் தகவல் கொடுத்தனர். வீட்டுக்கு விரைந்து வந்த முருகேசன், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து ராதாபுரம் போலீசில் முருகேசன் புகார் செய்தார். கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன், எஸ்ஐ சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: