அம்பை, அக். 17: அம்பை மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காயத்ரி தேவி கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்து வருகிறது. விழா நாட்களில் அம்பாள் ராஜ ராஜேஸ்வரி, அன்னபூரணி, மூகாம்பிகை, சூரிய நாராயணி, ஆண்டாள், மகாலெட்சுமி, துர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். விழா நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பள்ளி வளாகத்தில் அம்பாள் பெருமை, திருமந்திரம், திருவாசகத்தேன், பக்தி பெருமை, சகஸ்ரநாமம் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு அலங்கார தீபாராதனை, ஆராதனைகள் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மெரிட் கல்வி குழும ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். கோயிலில் நாளை (18ம் தேதி) வரை நவராத்திரி திருவிழா நடக்கிறது.