ராசிபுரம், அக்.17: ராசிபுரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 168 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி இயக்கம், ராசிபுரம் வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், அரசினர் மேல்நிலைபள்ளியில் நடந்தது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுமதி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் முகாமினை தொடங்கி வைத்தார். இதில், டாக்டர்கள் தமயந்தி, தமிழ்செல்வி, விஜயபிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கண், காது, மூக்கு, எலும்பு முறிவு உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். ராசிபுரம், புதுச்சத்திரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 168 பேர் கலந்து கொண்டனர். முகாமில் 36 பேருக்கு உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.