ராசிபுரம், அக்.17:ராசிபுரம் அருகே, கூனவேலம்பட்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதமாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி கிராமம் உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும், இக்கிராமத்தில், தறித்தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, கெங்கவல்லி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து ஜவுளி ரகங்கள், வேட்டி, துண்டு வகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் இரவு பகலின்றி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் சிலர் ஒரு வித மர்ம காய்ச்சலால், பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாமல் முடங்கி உள்ளனர். கை, கால்களில் வலி, மூட்டு மற்றும் நடப்பதில் சிரமம் என அவதிக்குள்ளாகி வருகின்றனர்.