கணவன் கழுத்தில் அரிவாள் வைத்து மனைவியின் செயின் பறிப்பு

ராமநாதபுரம், அக்.17: ராமநாதபுரம் அருகே கணவரை அரிவாளால் வெட்டி மனைவியிடம் தாலிச்செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (31). கடந்த சில மாதங்களுக்கு முன் திருமலை ஊர் திரும்பினார். நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ராமநாதபுரம் வந்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அழகன்குளம் நதிப்பாலம் அருகே வந்த போது, மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்து திருமலையின் கழுத்தில் அரிவாளை வைத்து அவரது மனைவி அணிந்திருந்த தாலி செயினை கழற்றி திருமாறு கேட்டுள்ளனர்.

தர மறுத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த தமிழரசி 9 பவுன் தாலிச்செயினை கழற்றி கொடுத்தார். திருமலையை அருகிலுள்ள முள்புதருக்குள் இழுத்து சென்று அரிவாளால் வெட்டிவிட்டு மூவரும் டூவீலரில் தப்பினர். காயமடைந்த திருமலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணவரை அரிவாளால் வெட்டி மனைவியிடம் தாலிச்செயின் பறிக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: