கருங்கல் அருகே மின்னல் தாக்கி வீடு சேதம்

கருங்கல், அக். 17:கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்போஸ்கோ. இவரது மனைவி புஷ்பராணி. இவர்களது வீடு கருங்கல் - திங்கள்சந்தை சாலையில் அமைந்துள்ளது. கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வீட்டில் ஜாண்போஸ்கோவின் தாயார் மற்றும் 2 பிள்ளைகள் மட்டும் இருந்தனர். இடி மின்னலுடன் மழை பெய்ததால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், ஜாண்போஸ்கோவின் வீட்டை மின்னல் தாக்கியது.

இதில், வீட்டின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மின்சாதன பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. மின்சார ஒயர்கள் தீயில் கருகின. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நேற்றைய மழையில் கருங்கல், மத்திகோடு சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.

Related Stories: