மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்த தாய் சாவு; தந்தை கவலைக்கிடம்

நாமக்கல், அக்.16: நாமக்கல் அருகே, மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், கணவனுடன் விஷம் குடித்த பெண் இறந்தார். அவரது கணவருக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் அருகே வேப்பனம்புதூரை சேர்ந்தவர் தங்கமணி(40). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த இவர், கட்டட மேஸ்திரி வசந்தபெருமாள்(42) என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார். தங்கமணியின் மகள் நந்தினி, முசிறியை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனவேதனை அடைந்த வசந்தபெருமாள், விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். இதையறிந்த தங்கமணியும் விஷத்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரையும் உறவினர்கள் மீட்டு, நேற்று மாலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தங்கமணி உயிரிழந்தார். வசந்தபெருமாளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: