நாமக்கல், அக்.16: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 2,225 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர். இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு உள்ளிட்ட கோரிக்கை என 2,225 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மனுகொடுக்க வரும் பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.