நாமக்கல், அக்.16: தரம் உயர்த்தப்பட்ட பொம்மம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளிக்கு, 2 மாதத்துக்கு பின் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு பள்ளிகளில் படித்து வந்த 3 மாணவிகளுக்கு பிளஸ் 1 வகுப்பில் திடீர் அட்மிஷன் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே பொம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை, கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால், கடந்த இரு மாதமாக இந்த பள்ளிக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பிளஸ் 1 வகுப்புக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென மாற்று பணியாக வேறு பள்ளிகளில் இருந்து 3 முதுகலை ஆசிரியர்கள், இந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் பிளஸ்1 வகுப்புக்கு மாணவ, மாணவிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஒரு மாணவி மட்டும் பிளஸ் 1 முதல் குரூப்பில் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று திடீரென மேலும் 2 மாணவர்கள் அதே குருப்பில் சேர்ந்தனர். மாணவர்கள் வந்த சிறிது நேரத்தில் வெளி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 2 முதுகலை ஆசிரியைகள் கையில் மாறுதல் உத்தரவுடன் பள்ளிக்கு வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலில் வந்த முதுகலை இயற்பியல் ஆசிரியை செல்வமணி, நேற்று பணிக்கு சேர்ந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்த தாவரவியல் ஆசிரியை, மாறுதல் உத்தரவின் நகலை மட்டும் கொண்டு வந்திருந்தார். அசல் உத்தரவை எடுத்து வரவில்லை.