கீழக்கரை, அக்.16: பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி, தாசில்தார் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரை அருகே பழஞ்சிரை கிராமத்தில் ஊரணி உள்ளது. கிராமத்துக்கு சொந்தமான இந்த ஊரணிக்கு செல்லும் பாதையை தனியார் சிலர், முள்வேலி போட்டு அடைத்துள்ளனர். இப்பகுதி கிராமமக்கள் ஊரணியில் குளிக்க முடியாமலும், துணி துவைக்க முடியாமலும் அவதியடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராமமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று முன்தினம் இரவு, பொதுப்பாதையை அதிகாரிகள் மீட்டு தர கோரி கீழக்கரை-ராமநாதபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.