தூத்துக்குடி அருகே வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ஸ்பிக்நகர், அக்.16: தூத்துக்குடி அருகே வாலிபர் கொலை வழக்கில் 4பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் முருகேசன் (41). இவர் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இவரது சித்தப்பா தங்கபாண்டிகடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலைசெய்யப்பட்டார். இதில் முள்ளக்காடு நேருஜீ நகரை சேர்ந்த முத்து மகன் மாரிச்சாமி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

தங்கபாண்டி கொலைக்கு பலி வாங்குவதற்காக தக்கசமயம் பார்த்து முருகேசன் காத்திருந்தார்.

சமீபத்தில் தசராவிற்காக வேடமனிந்த முருகேசன் நேற்று முன்தினம் முள்ளக்காடு சுற்றுவட்டார பகுதியில் காணிக்கை சேகரித்தார். பின்னர் நேருஜீநகர் பகுதிக்கு சென்றார். முருகேசன் தாடி மற்றும் வேடம் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியாத மாரிச்சாமி அவர் அருகில் சென்றார். அப்போது முருகேசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியதில் மாரிச்சாமியின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

 உடனடியாக சுதாரித்துக்கொண்ட மாரிச்சாமி மற்றும் அருகில் இருந்தவர்கள் அரிவாளை பிடுங்கி முருகேசனை தாக்கியதுடன், சரமாரியாக கற்களாலும் எறிந்தனர். இதில் படுகாயமடைந்த முருகேசன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

காயமடைந்த மாரிச்சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் எஸ்ஐ ராஜபிரபு ஆகியோர் நேற்று மாரிச்சாமியை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மூக்காண்டி (39). முத்து மகன் சரவணன், ராஜீவ்நகர் வேலுச்சாமி மகன் அந்தோணிராஜ் (37) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: