கூடுவாஞ்சேரி அருகே விவசாயிடம் ₹1.30 லட்சம் அபேஸ்: பைக் ஆசாமிகளுக்கு வலை

கூடுவாஞ்சேரி, அக்.16: வண்டலூர் அருகே விவசாயிடம் இருந்து ₹ 1.30 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பைக் ஆசாமிகளை புகாரின் பேரில் போலீசார் தேடிவருகின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த திருநாராயணபுரம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்  முருகேசன் (64).  விவசாயி.   இங்குள்ள பெருமாள் கோயிலில் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  முருகேசன், கோயில் திருப்பணிக்காக   நல்லம்பாக்கம் இந்தியன் வங்கியில் நேற்று காலை 11 மணிக்கு ₹1.30 லட்சம் பணம் எடுத்துள்ளார்.

அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டார்.  வழியில் கண்டிகையில் உள்ள  ஸ்வீட் கடை அருகில்  சைக்கிளை நிறுத்திவிட்டு  வாட்டர் பாக்கெட் வாங்கியுள்ளார். அப்போது, முருகேசனை நோட்டமிட்டு பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள்,  சைக்கிளில் வைத்திருந்த பண பையை எடுத்துக்கொண்டு தப்பினர்.   

இதுகுறித்து தாழம்பூர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தியன் வங்கி, ஸ்வீட் கடை அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து

வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: