பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது

கிருஷ்ணகிரி, அக்.12:   விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதியதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே முளைத்துவிடும்.

இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி, மலர்களாய் மலரும். இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டதாகும். இந்த மலர் வெள்ளை நட்சத்திரம் போல் ஒரு தட்டு அளவிற்கு காணப்படும். இந்த வித்தியாசமான மலர் இமயமலையை சேர்ந்தது. பிரம்மனின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றுவது போல் அமைத்திருப்பதால், பிரம்ம கமலம் என்றழைக்கின்றனர். மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் வாய்ந்த இந்த அதிசய மலரை, அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியரான மணி(60) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரம்ம கமலம் செடியில் 8 பூக்கள் பூத்து குலுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த அதிசய பூவை ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

Related Stories: