பாகூர், அக். 12: பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (35). கொத்தனாரான இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வது போல் நாடகமாடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தினம் தகராறு செய்துவிட்டு தூக்கு மாட்டிக் கொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவரது மனைவி தூங்கி விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் கோவிந்தன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார். இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தன் மனைவி கோவிந்தம்மாள் (30) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.