அம்பத்தூர், அக். 12: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பராபட்சம் இல்லாமல் அகற்றப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி உள்ள கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரட்டூர் ஏரியின் உட்பகுதியான முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய இடங்களில் 598 ஆக்கிரமிப்பு வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் 1000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் குடும்பத்தினருடன் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தாசில்தார் சிராஜ்பாபு தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஏற்க மறுத்தார்.