தாழம்பூர் ஏரிக்கரையில் வாலிபர் அடித்து கொலை

திருப்போரூர், அக்.12: சென்னை அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

தாழம்பூர் ஏரிப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் தலை மற்றும் உடல் முழுவதும் உருட்டுக் கட்டையால் தாக்கிய அடையாளங்களுடன் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. கருப்பு ஜீன்ஸ் பேண்ட், கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்.

அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் வந்து சென்ற தடயமும், சிலர் உட்கார்ந்து மது அருந்தியதற்கு அடையாளமாக மது பாட்டில்களும் கிடந்தன. மேலும், அருகில் இருந்த வேப்ப மரத்தின் மரக்கிளையை ஒடித்து இறந்து கிடந்த நபரை சரமாரியாக அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. சென்னைப் புறநகர் பகுதிகளில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காணாமல் போனதாக வழக்கு ஏதேனும் பதியப்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: