திருப்போரூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்போரூர், அக்.12: திருப்போரூர் அருகே காலவாக்கத்தில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன்  மகன் கோகுல் (22) என்பவர் பொறியியல் (சிவில்) பாடத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இறுதியாண்டில் முடிக்க வேண்டிய புராஜக்ட் மற்றும் சிறு தேர்வுகளை நேற்று முன்தினம் அவர் முடித்திருந்தார்.விரைவில் விடுதி அறையை காலி செய்து விட்டு வீட்டுக்கு வருவதாக அவருடைய தந்தையிடம் செல்போனில் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது தந்தை வீரபத்திரன் தனது மகன் கோகுலுக்கு போன் செய்திருந்தார். செல்போனை கோகுல் எடுக்காததால் கல்லூரி நிர்வாகத்திற்கு அவர் தகவல் கூறினார்.

இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் கோகுல் நண்பர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது விடுதி அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே கோகுல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.  திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வந்து அறைக்கதவை உடைத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோகுலின் அறையில் சோதனையிட்டபோது கோகுல் ஆங்கிலத்தில் எழுதி வைத்த ஒரு கடிதம் கிடைத்தது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், நண்பர்களும், பெற்றோரும் மன்னிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் நண்பர்கள் இருவரிடம் வாங்கிய கடன் தொகையைக் குறிப்பிட்டு அந்த தொகையை கொடுத்து விடுமாறும் எழுதப்பட்டிருந்தது. மாணவரின் மர்ம மரணம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: