பெரும்புதூர், அக்.12: பெரும்புதூர் ஒன்றியம் குணகரம்பாக்கம் ஊராட்சி மேலேரி கிராமத்தில் 400க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு அதே பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யபடுகிறது.கடந்த ஒரு வாரமாக மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர வழங்கவில்லை. மேலும் அதே பகுதியில் 4 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளாக 3 தொட்டிகள் பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளது.ஒரு தொட்டியில் மட்டும் குடிநீரை தேக்கி வைத்தாலும், குழாய்கள் பழுதாகி கிடப்பதால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.இதுபற்றி ஊராட்சி செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அனைத்து அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி செயலர் கிராமத்திற்கு வருவதே இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.