பெரும்புதூர், அக்.12: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமாத்தூர் கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள், படப்பை வழியாக பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு செல்ல சிறுமாத்தூர்-படப்பை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடந்த 2017ம் ஆண்டு ரூ 60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஒரு மின் விளக்கு கூட பொருத்தப்படவில்லை. இதனால் சாலை முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமாத்தூர் கிராமத்தில் 5 தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.