முறைகேடாக விவசாய கடன் வழங்கல் கூட்டுறவு சங்க இயக்குனரை மிரட்டிய அதிமுக நிர்வாகி

வாழப்பாடி, அக்.11: வாழப்பாடி அருகே கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில், முறைகேடாக விவசாய கடன் வழங்கியது குறித்து கேள்வி கேட்ட சங்க இயக்குனரை, அதிமுக நிர்வாகி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டி (எஸ் 1272) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.  இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது சங்கத்தில் முறைகேடாக அதிமுக நிர்வாகி பச்சமுத்து என்பவருக்கு, விவசாய கடன் ரூ80 ஆயிரம் மற்றும் விவசாய நகை கடன் இரண்டும் வழங்கியதாக, இயக்குனர் வெற்றிமணி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, கடன் பெற்ற அதிமுக நிர்வாகி, இயக்குனர் வெற்றிமணியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இயக்குனர் வெற்றிமணி, உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இயக்குனர்கள் அல்லாத அதிமுகவினர், சிலர் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதாக, சங்க உறுப்பினர் பெருமாள், ஆத்தூர் சரக துணை பதிவாளருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து நேரில் விசாரணை நடத்துவதாக, அவரிடம் துணைப்பதிவாளர் தெரிவித்தார்.

Related Stories: